யோகி ஒருவரின் ஞானத்தைப் பார்த்த அரசன் ஒருவன் அவர் விரும்பாத போதும் கூட வற்புறுத்தி ஒரு மாளிகையை அளித்து அதில் தன்னை நல்வழியில் செலுத்துவதற்காக எப்போதும் கூடவே வசித்து வர பெரிதும் வணங்கி வேண்டினான். யோகிக்கு வந்த வாழ்வைக் காணப் பொறுக்காத ஒரு செல்வந்த பிரபு அரசரிடம் ஒரு நாள், “அரசே! அந்த யோகி ஏராளமாகப் பணத்தையும் தங்க, வெள்ளிக் கட்டிகளையும் சேர்த்து வைத்திருக்கிறார். இவற்றை அதிக வட்டிக்கு வேறு விடுகிறார். அப்படி வட்டிக்குத் தரும் போது அரசன் என்று இறக்கிறானோ அன்று இதைத் திருப்பித் தந்தால் போதும் என்று வேறு சொல்கிறார்.” என்றார்.
குழம்பிப் போன அரசனிடம் திரும்பத் திரும்ப இதைச் சொல்லவே அவனுக்கு யோகியின் மீது கோபம் வந்தது.
அரச சபை கூடியிருந்த போது நேரடியாகவே கோபத்துடன் அரசன் அவரிடம் கேட்டான்:-” என்ன யோகியாரே! பணத்தையும் தங்கம் முதலானவற்றையும் அதிக வட்டிக்கு மக்களுக்கு விடுவதோடு நான் இறக்கும் போது அவற்றை வாங்கிக் கொள்வதாகச் சொல்கிறீர்களாமே, இது உண்மையா?”
யோகிக்கு செல்வந்தரின் பொறாமையும் சூழ்ச்சியும் புரிந்தது.
மிக மெதுவாக சாந்தமான குரலில், ” ஆமாம், மன்னா! அப்படித்தான் சொல்லிக் கொடுக்கிறேன்!” என்றார்.
சபையிலுள்ளோர் ஹா என்று கூவினர். செல்வந்தரோ இன்றோடு யோகியின் அத்தியாயம் முடிந்தது என்று மகிழ்ந்தார்.
அரசர் ஆச்சரியத்தோடு யோகியைப் பார்த்து, “என்ன தைரியம் இருந்தால் இப்படி செய்வீர்கள்? செய்வதை ஒப்புக் கொள்ளவும் செய்வீர்கள்?” என்றான்.
அரசனை நோக்கிய யோகி, “மன்னரே! நான் விடும் அகாத வட்டிக்கு எந்தக் குடிமகனானாலும் கூட அசலையும் வட்டியையும் தர முடியுமா என்ன? அவர்கள் என்ன செய்வார்கள்? அரசன் இறக்கவே கூடாது! நெடு நாள் வாழ வேண்டும். நாங்கள் பணத்தை திருப்பி அளிக்கத் தேவையே இருக்கக் கூடாது என்று இறைவனை தினம் தோறும் பிரார்த்தனை அல்லவா செய்வார்கள். இந்தக் கூட்டுப் பிரார்த்தனையால் அரசர் நெடு நாள் வாழ்ந்து தேசம் சுபிட்சமாக இருக்குமல்லவா! அதனால் அப்படிச் செய்தேன்” என்றார்.
மனம் குளிர்ந்த அரசன், “யோகியாரே! கஜானாவில் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் இன்னும் எடுத்துக் கொள்ளுங்கள்! மக்கள் நான் நீண்ட நாள் வாழுமாறு பிரார்த்தனை செய்ய உதவி புரியுங்கள்” என்று வினயமாக வேண்டினான்.
யோகியாரோ, “அரசரே! இதற்குத் தங்கள் கஜானா பணத்தை எடுக்க வேண்டுமா,என்ன, இதோ இருக்கிறாரே, இந்த செல்வந்தர் இவரிடம் உள்ளதே போதுமே” என்றார். எதுவும் பேச முடியாமல் செல்வந்தர் திகைக்க, அரசன் மோதிக்க, மக்கள் மகிழ யோகியார் செல்வந்தரின் பணம் அனைத்தையும் எடுத்து மிக அதிக வட்டிக்கு ஏழைகளுக்கு வழங்கினார்! அதை தானமாகப் பெற்ற மக்கள் அரசனை வாழ்த்தினர்!
முக்தி அடைந்த விதம்.
சாது வேஷம் போட்ட சோம்பேறிகள் சிலர் ஒரு கிராமத்திலிருந்த தோட்டத்தை ஆக்கிரமித்து நன்றாக உண்டு கொழுத்து வந்தனர். ஒரு நாள் பழுத்த பழங்களைப் பறிக்க எண்ணிய ஒரு தொப்பை சந்நியாசி மரத்தின் உச்சியில் உள்ள கிளையின் மீது கிடுகிடுவென்று ஏறினார். அவரது பாரம் தாங்காமல் கிளை முறிய கீழே விழுந்த அவர், இறந்து போனார். அந்த சமயத்தில் யோகி ஒருவர் அங்கே வர, கூடவே கிராம மக்களும் கிராம அதிகாரியும் வந்து குழுமி விட்டனர். கிராம அதிகாரி (போலி) சாதுக்களைப் பார்த்து இவர் எப்படி இறந்தார் என்று வினவ அவர்கள் முழித்தனர். யோகி, கிராம அதிகாரியை நோக்கி, “அவர் பாரம் தாங்காமல் அவரே முக்தி அடைந்தார்!” என்று பதில் சொன்னார்.
ஞானம் வரும் நேரம்!
“ஒரு நிமிடத்தில் ஞானம் அடைந்து விட முடியுமா என்ன ?” சிஷ்யன் குருவிடம் சந்தேகத்தோடு கேட்டான்.
“நிச்சயமாக அடைந்து விட முடியும்” என்று குரு பதில் சொன்னார்.
“ஆனால், குருவே, ஒரு நிமிடம் என்பது மிகவும் குறைவான நேரமாக இருக்கிறதே”-சந்தேகம் தீராத சிஷ்யன் மென்று விழுங்கினான்.
“59 விநாடிகள் அதிகமாக இருக்கிறது, அப்பனே!” என்றார் குரு.
மற்ற சிஷ்யர்கள் எல்லோரும் இந்த உரையாடலைக் கேட்டு திகைத்தனர்.
பிறகு குரு கேட்டார்:-
“சந்திரனைப் பார்க்க எவ்வளவு நேரம் பிடிக்கிறது?”
“உடனே பார்க்கலாமே!… அப்படியானால் எல்லோராலும் ஏன் ஞானம் பெற முடியவில்லை? ஆன்மீக சாதனையில் இவ்வளவு காலம் ஏன் செலவிட வேண்டியிருக்கிறது?”- சிஷ்யர்கள் வினவினர்.
“கண்களை மூடிக்கொண்டே இருக்கும் ஒருவர் கண்ணைத் திறக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்! ஆனால் கண்ணைத் திறந்து விட்டால் க்ஷண மாத்திரத்திலேயே பார்க்க முடியும், இல்லையா!” சாதுவின் விளக்கத்தை சிஷ்யர்கள் புரிந்து கொண்டனர்!
(post copied from another forum)
சத்தியராஜ் சீனிவாசன் பதிப்பித்தது.